ஜெபமும், சிநேகிதனும்!

ஜெபமும், சிநேகிதனும்!
"நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?" (ஆதி. 18:18).
நீங்கள், உங்களை கர்த்தருடைய சிநேகிதனாக ஒப்புக்கொடுத்தால், நிச்சயமாகவே கர்த்தர் மனம் திறந்து உங்களோடு பேசுவார். ஆபிரகாம் ‘கர்த்தருடைய சிநேகிதன்’ என்று அழைக்கப்பட்டார் (யாக். 2:23). ஆகவே, கர்த்தர் பத்து முறை, ஆபிரகாமுக்கு தரிசனமானார். பலமுறை, தாமாகவே வலிய ஆபிரகாமை தேடி வந்து பேசினார்.
சொப்பனங்களிலே பேசினார். சில நேரம், நேருக்குநேர் பேசினார். ஆண்டவருக்கு, "சிநேகிதர்" தேவை. கர்த்தருடைய பாரங்களை தன்மேல் ஏற்றுக்கொண்டு, அவரோடு இணைந்து ஜெபிக்கிற, சிநேகிதர்களை அவருடைய கண்கள் தேடுகிறது. சோதோம் கொமோரா பட்டணம் அழிக்கப்படுவதைக் குறித்து, கர்த்தர் ஆபிரகாமோடு பேசினபோது, ஆபிரகாம் உடனே முழங்கால்படியிட்டு, "நீதிமான்கள் அழிக்கப்படக் கூடாது" என்ற வைராக்கியத்தோடு ஊக்கமாய் ஜெபம் பண்ணினார்.
ஆபிரகாம்தான், முதன்முதலில் ஊக்கமான மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுத்தவர். கர்த்தர் உடனுக்குடன் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். "நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தல முழுவதையும் இரட்சிப்பேன்" என்று உடனே பதில் சொன்னார் (ஆதி. 18:26).
மீண்டும் ஆபிரகாம் ஒருவேளை "நாற்பத்தைந்து நீதிமான்கள் இருந்தால்" என்று கேட்டபோது, கர்த்தர், "அதை அழிப்பதில்லை" என்றார். மீண்டும் ஆபிரகாம், "நாற்பது நீதிமான்கள் இருந்தால்" என்று கேட்டதற்கு, கர்த்தர், "நாற்பது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை" என்றார் (ஆதி. 18:28,29). ஆபிரகாம் முப்பது, இருபது, பத்து என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, கர்த்தர் பொறுமையாய் பதில் அளித்துக்கொண்டே இருந்தார்.
இயேசுகிறிஸ்துவினுடைய நாட்களிலே, அவருடைய சீஷர்கள் அவருக்கு சிநேகிதராய் இருந்தார்கள். இயேசு அன்போடு சொன்னார், "நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்" (யோவான் 15:15).
கர்த்தர் உங்களை தம்முடைய சிநேகிதனாக தெரிந்து கொண்டிருக்கிறார். ஊழியக்காரர்களாய் தெரிந்துகொண்டிருக்கிறார். தீர்க்கதரிசிகளாக தெரிந்துகொண்டிருக்கிறார். "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7).
கென்னத் ஹெகின் என்ற பக்தன், தன் வாலிப வயதிலே, கர்த்தர் தன்னை நடத்துவதற்கு ஒப்புக்கொடுத்து, கர்த்தருடைய சிநேகிதரானார். கர்த்தர் யாருக்காகிலும் விண்ணப்பம் செய்யும்படி அவரிடத்தில் சொல்லும்போது, அவர் பாரமெடுத்து ஜெபிப்பதுண்டு. இதனால் கர்த்தர், மீண்டும் மீண்டும் ஜெப விண்ணப்பங்களை கொடுத்து ஜெபிக்கச் சேவார்.
அவர் தேவ சமுகத்தில் காத்திருந்து அந்நிய பாஷையிலே பேசிக்கொண்டே இருப்பார். பின்பு அந்த பாஷைகளை தனக்குத் தானே மொழிபெயர்த்து, தேவ சித்தத்தை அறிந்துகொள்வார். ஆவியானவரால் வழிநடத்தப்படுவார். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய சிநேகிதராகும்படி, இன்று உங்களை ஒப்புக்கொடுங்கள்.
நினைவிற்கு:- "பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்" (மத். 10:20).

Comments

Popular posts from this blog

மாராவின் கசப்பு மதுரமானது

நீ...சகலத்தையும் திருப்பிக்கொள்வாய்